வாரிசு நடிகர்கள் அதிகம் உள்ள தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான குடும்பம் நடிகர் சிவகுமாரின் குடும்பம். அண்மை காலங்களாக தனியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் ஜோதிகா தற்போது தனது கொழுந்தனாருடன் இணைந்து நடிக்கிறார். ஆனால் அண்ணியாக அல்ல அக்காவாக.
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘தம்பி’ என்று பெயர் வைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தம்பி என்று பெயர் வைத்து இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள்.